நல்லதுதானே?!

சென்ற வாரம் முடிந்த சிங்கை தமிழ் மொழி மாதக் கொண்டாட்டத்தில் பல நல்ல நிகழ்ச்சிகள் இருந்தன.

வழக்கம் போல சில பள்ளிகளின் போட்டி நிகழ்ச்சிகள், நாடகப் போட்டிகள், விழாக்கள், சொற்களம் என்று சிங்கப்பூர் தமிழ் மக்கள் கொஞ்சம் திக்குமுக்காடிப் போனது என்னவோ உண்மைதான்.

ஷப்பீர் இசையமைத்த 'தமிழை நேசிப்போம், தமிழில் பேசுவோம்' பாடல் இன்னாட்டின் தமிழ் பேசும் பட்டி தொட்டிகளில் எல்லாம் முழங்கியது என்றால் அது மிகையாகாது.

இந்த நிகழ்ச்சிகளில் ஒன்று 'கலக்கல்'. இவண் (எவ்வளவு நாளாச்சு இந்த வார்த்தையைக் கேட்டு?) நாடகக் குழு நடத்திய தொடக்க/உயர் நிலைப் பள்ளிகளுக்கான நாடகப் போட்டி. இறுதிப் போட்டியில் 3 தொ.ப; 3 உ.ப. ஒவ்வொரு பள்ளியும் பழமொழியை ஒட்டி நாடகம் போட வேண்டும். 'திடீர்' நாடகமும் நடிக்க வேண்டும். நல்ல பலத்த போட்டி.

உட்லேண்ட்ஸ் நூலகத்தில் நடந்த போட்டியைக் காண அரங்கம் நிறைந்திருந்தது. படிகளில் எல்லாம் மக்கள் உட்கார்ந்து (நெளிந்து கொண்டே :-() ரசித்தார்கள் என்பதற்கு அடியேன் சாட்சி.

சரி, இது இவண் குழுவிற்கான plug இல்லை ;-)

நிகழ்ச்சியின் போது ஒரு மாணவனைச் சந்தித்தேன். என் இருக்கைக்கு அருகில் தரையில் அமர்ந்திருந்தான். கொஞ்சம் மங்கலான எனக்கே அவன் ரொம்ப சூட்டிகை என்று புரிந்து விட்டது.


எங்கள் இருவருக்கும் இடையே நடந்த முதல் உரையாடல்:

- தம்பி, உன் பேர் என்ன?
- யுகேஷ் சார்!
- எந்த பள்ளியில படிக்கிறே? (தமிழ் விழா பாருங்க, அதனால பள்ளின்னு கேட்கணும், இல்லன்னா, 'எந்த ஸ்கூல் பா?')
- உட்லேண்ட்ஸ் ரிங் (Woodlands Ring)
- எது? உட்லேண்ட்ஸ்-ஆ?
- இல்லே சார்! உட்லேண்ட்ஸ் ரிங்! மோதிரம், மோதிரம் (செய்கையுடன்)
- (மனதிற்குள்ளே) ஆஹா, கிளம்பிட்டான்ய்யா!

யுகேஷ் நாடகங்களை மிகவும் உன்னிப்பாகவும், உற்சாகத்துடனும் பார்த்து, ரசித்துக் கொண்டிருந்தான். அவ்வப்போது சிலபல கமெண்டுகள் வேறு!

போட்டியில் பங்கு பெற்ற ஒரு பள்ளியின் நாடகத்தின் கான்செப்ட் (அதுதாங்க, கருப்பொருள்!) சிறிது வித்தியாசமாக இருந்தது. அவர்களுடைய பழமொழி: 'தனிமரம் தோப்பாகாது'.

வானத்தில் இருக்கும் நட்சத்திரங்களை நிலவு அரசன் ஒரு வீட்டைக் கட்டச் சொல்கிறான். கட்டி முடிக்க ஒரு மாத அவகாசமும் தருகிறான். கட்டவில்லை என்றால் அந்த நட்சத்திரங்களை பூமிக்கு அனுப்பி மனிதப்பிறவி எடுக்க வைத்துவிடுவதாக பயமுறுத்துகிறான்.

இதைக்கேட்டு அந்த விண்மீன்கள் 'ஐய்யய்யோ! மனிதப்பிறவியா? வேண்டவே வேண்டாம்!' என்று அலறுகின்றன.

அதுக்கு நம்ம யுகேஷ் அடித்த கமெண்டுதான் இன்றைய பதிவின் தலைப்பு!

யோசித்துப் பார்த்தால், 'அரிது, அரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது!' என்று ஔவையார் கூறியதை அவன் புரிந்து கொண்டுவிட்டானோ என்று தோன்றுகிறது.

மனிதனாய்ப் பிறந்தால் எவ்வளவு வலி, கோபம், தாபம், துன்பம், துக்கம் உண்டு - அது எதுவும் வேண்டாம் என்ற யுடோப்பியன் கனவை அக்கதாபாத்திரங்கள் பரப்பினாலும், யுகேஷின் அந்த ஒரு 'நல்லதுதானே!' என்ற சொல், மேலே சொன்ன அத்தனைக் 'கெடுதல்களுக்கும்' மேலாக, அன்பு, பாசம், வெற்றி, மகிழ்ச்சி, இன்பம் என்ற மறுபக்கங்களும் உண்டு என்று புரிய வைத்தன.

எதற்கு எடுத்தாலும் வாழ்வின் ஆச்சரியங்களைக் குறை கூறும் நமக்கு இந்த 'நல்லதுதானே!' நல்ல ஒரு நிறைதானே!!

பி.கு: இன்னொரு நாடகத்தில் ஒரு குழந்தை பள்ளியில் நன்கு படிக்காததால் அவளை அவள் ஆசிரியையும் அம்மாவும், மனோதத்துவ நிபுணரிடம் (அதாங்க, Psychiatrist!) அழைத்துச் செல்ல முடிவு செய்கிறார்கள். அதற்கு யுகேஷின் கேள்வி: " Psychiatrist-ஆ? எதுக்கு? அந்தப் பொண்ணுக்கு Bipolar disorder-ஆ என்ன ?

தம்பி தனுசு! நம்ம கொயந்தங்களுக்கு நல்லா சயன்ஸு சொல்லிக் கொடுத்துட்டே!!

Comments

  1. தனுசு மட்டுமா? விக்ரம் கூடத்தான் சொல்லிக் குடுத்தாரு !!!

    நெம்ப நாளைக்கப்பறம்.... நெம்ப நல்லாருந்துச்சுங் !!

    ReplyDelete

Post a Comment